Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

தொலையும் தொன்மைகள் | தமிழ்நிலா

Leave a Comment



யாழ்ப்பாணத்தில் கோவில்களும், கோவில்களில் தேர் திருவிழாவும் மிகவும் முக்கியமானதுடன் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. தேர் எனப்படுவது கடவுள் சிலைகளை வைத்து இழுத்துச் செல்லும் மரச்சட்டகங்களாலும், மரச்சிற்பங்களாலும் முழுவதுமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் நான்கு சக்கரங்களுடன் இருக்கும் வாகனம். இந்தத் தேர்கள் யாழ்ப்பாணத்தில் கோண்டாவில், திருநெல்வேலி, தாவடி போன்ற இடங்களில், தென்மராட்சி மட்டுவில் மற்றும் வடமராட்சிகளில் உள்ள சிற்பக் கூடங்களிலும் செய்யப்படுகின்றன.

தேரில் மரச்சிற்பம்


உறுதியான நான்கு சக்கரங்களுடன் அமைக்கப்பட்டு, மரச்சட்டகங்களால் அடிச்சட்டகம் அமைக்கப்பட்டு தேரினை சுற்றி கடவுள்கள், தேவ உருவங்கள், புராணக்கதைகள், விலங்குகள், அரசர்கள், பக்தர்கள், போன்ற பல உருவங்கள் உருவாக்கப்பட்டிருக்கும். முன்னால் பாயும் குதிரைகளும் குதிரைகளை செலுத்துவது போன்றும் அமைக்கப்பட்டிருக்கும். இவை சிற்பிகளால் சரியான உருவங்களில் ஒரு மரத்திலோ, அல்லது இரண்டை இணைத்தோ கைகளால் செதுக்கி உருவாக்கப்படும் வடிவங்கள் ஆகும்.
சிற்பக்கலைக்கூடங்கள் மிகவும் அழகாக உருவாக்கப்பட்டு அங்கே பரம்பரை பரம்பரையாக தேர், வாகனங்கள் செய்யும் தொழிலை செய்துவருகின்றனர் தேர்ச்சி பெற்ற ஆசாரிமார். அப்படியான சிற்பக்கலைக்கூடத்தில் சிற்பாச்சாரி ஒருவரை சந்தித்தோம் "வணக்கம் ஐயா உங்களைப்பற்றி சொல்லுங்கோ?"



வேலைகளை சரிபார்க்கும் திரு.ஜெயப்பிரகாஸ்


"அப்பாவின் அப்பா ஆறுமுகம் ஆசாரியார்தான் முதன் முதலில் யாழ்ப்பாணத்தில வாகனம் செய்ய வெளிக்கிட்டவர். முதன் முதல் வட்டுக்கோட்டையில் செய்திருப்பினம். பிறகு திருநெல்வேலி எண்டேக்கை இங்கைதான். 1941ல் யாழ்ப்பாணத்தில் முதல் சித்திரத்தேர் செய்தது அவர்தான். யாழ்ப்பாணம் வீரமாகாளி அம்மனுக்கு. அதைத் தெடர்ந்து இந்தியாக்காரர் வந்து தேர் செய்துகொண்டிருக்கேக்கை தேர் செய்யக்கூடிய குடும்பமாய் தான் எங்கடை குடும்பம் இருந்து கொண்டிருந்தது. எங்கட அப்பா, அவரின் சகோதரர் இரண்டு பேரும் சேர்ந்துதான் அவர்களின் தகப்பனாற்றை மறைவுக்குப் பிறகு அவரின் பெயரில் "ஆறுமுகம் சிற்பக் கூடம்" என்ற நிறுவனத்தை உருவாக்கி செய்து கொண்டு வந்தவை. பிறகு அவர்களின் மறைவுக்குப் பிறகு நான் தொடர்து செய்யுறன்" மிகுந்த பழமையான சிற்பக் கலைக்கூடத்தினை வைத்திருப்பவரும், ஏனைய சிற்பாலையங்களை வைத்திருப்போரால் "அப்பண்ணை" என்று அழைக்கப்படும் திரு ஜீவரட்ணம் ஜெயப்பிரகாஸ் எங்களுடன் அனுபவங்களைச்சொல்லத் தயாரானார்.

1941 இல் செய்த அந்த தேர் இப்பவும் கோயில்லை இருக்கா என்ற கேள்வி எழுந்தது. "ஓஓ இப்பவும் ஓடுது. இன்றைக்கு 78 வருடம் ஆச்சு. 1941ம் ஆண்டு வெள்ளோட்டம் ஓடினது. அந்தக் காலத்திலயே ஆறு மாத காலத்தில செய்து முடிக்கப்பட்ட தேர். கையால செய்தது. இப்ப மிசினறி." என்று சலிப்புடன் நிறுத்திக்கொண்டார்.

"அப்பாவோட சேர்ந்து உதவிக்கு நிண்டு நிண்டுதான் பழகினது. யாழ்ப்பாணத்திலை அப்பா மட்டும் 100, 110 தேர் செய்திருப்பர். கூடுதலாய் எல்லா ஊரிலையும் இருக்கு. நானும் 40, 45 தேர் செய்திருப்பன். 2002ல் அப்பா மறைஞ்சதும் அவர் விட்ட வேலையளை பிறகு நாங்களும் எடுத்து செய்துகொண்டிருக்கிறம்."

நாங்கள் அவருடன் கதைத்துக்கொண்டிருக்கும் போதும் தனது உதவியாளர்களை வழிநடத்திக்கொண்டு கதைத்துக்கொடிருந்தார். எங்களுக்கு அப்போது ஒரு கேள்வி எழுந்தது. இவ்வாறாக கலைகளின் எதிர்காலம் தொடர்பாக.

"ஐயா இந்த தொழிலை அடுத்த தலைமுறை கற்றுக்கொள்றதுக்கு வாய்ப்பிருக்கிறதா..?"



"ஓம் அடுத்த தலைமுறை இப்ப எல்லாம் கற்றுக்கொண்டு தனித்தனிய செய்ற அளவிலைதான் இருக்கு. யாழ்ப்பாணத்தில எங்களிட்டை பழகின ஆக்கள் கூட தனித்தனிய செய்யினம். ஆற்றல் வளர்ந்திருக்கு எண்டுறதை விட கொஞ்சம் வேலை தெரிஞ்சவுடனேயே செய்யினம். வெளிநாட்டு உதவியள் இப்ப வாறதாலை ஒரே நேரத்தில் பல கோயில்களில் திருப்பணியள் நடக்கிறதாலை எங்களாலையும் எல்லா வேலையளையும் செய்யேலாதுதானே. எங்களுக்கு இப்ப நேரம் இல்லாட்டில் வேறை ஆக்களும் எடுத்துச் செய்ற அளவுக்கு இருக்கு. எங்களிட்டை பழகினாக்களும் நிறையப்பேர் செய்யினம்."

ஆனாலும் நல்ல ஒரு பெறுமதி அல்லது வேலைக்கு ஏற்ற ஊதியம் அவர்களுடைய தொழிலுக்குத் தருவதில்லை என நொந்துகொண்டார். உதாரணமாக நகை வேலை செய்வோர், தகட்டு வேலை செய்வோர் சேதாரம் என்று கணக்கில் போடுவதாகவும் ஆனால் தாங்கள் ஒரு மரத்தைக் சிறிதாக குறைத்து நறுக்கினால் கூட பின்னர் எதுவும் செய்யமுடியாது. அவற்றை விறகுக்குத்தான் போடவேணும். என்கிறார்

"இலாபம் இல்லாமல் ஒருத்தரும் தொழில் செய்யிறதில்லை. நாங்கள் சில வேலைகளை செய்ய வேணுமெண்டு ஆசைப்பட்டுக் காசு கேக்கேக்கை சில பேர் அந்த பெறுமதிக்குத் தராயினம். நாங்கள் 50 இலட்சம் கேட்டால் அவர் 40 இலட்சமுக்கு செய்யிறார். நீங்கள் செய்யேலாதோ என்று கேக்கினம். அப்பிடிக் கேட்டாக் கூடப் பறவாயில்லை. உடன குறைஞ்ச றேட்டுக்கு குடுத்திடுகினம். என்ன செய்யப் போறம் என்றது கடைசி வரைக்கும் தெரியாது. எங்கடை கற்பனையில உள்ளதுதானே.


போதிகை


இந்த தேரில பாருங்கோ, போதிகள் செய்து வைச்சிருக்கு. அதிலை குறிப்பிட்ட தொகை வைச்சிருக்கிறம். ரேட்டுக் குறையேக்குள்ளை அது இன்னும் குறையும். காசு கூட வரேக்கை அதிலை இன்னும் இரண்டு மூன்று கூட வைக்கலாம். கற்பனை தானே. நாங்கள் சந்தோசமாய் செய்யேக்கை எங்கட மன நிலை சந்தோசமாய் இருக்கேக்கை வேலைத் திறன் அதிகமாய் இருக்கும். காசு பெறுமதி கோட்டேசன் என்று எடுத்துச் செய்யேக்குள்ளை ஒரு லிமிற்றுக்குள்ளைதான் வேலை செய்யக் கூடியதாய் இருக்கு. எங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம். அப்பிடி இருந்தும் சிலபேர் எங்களிட்டை என்று தேடி வரேக்கை காசைப் பாக்காமலும் அவையளின்ர அனுசரணை எங்களைக் கௌரவிக்கிற முறையளில சில வேலையளை நாங்கள் நல்லமாதிரி செய்ய வேண்டிய கட்டாயமும் இருக்கு."

இவ்வளவு விடையங்கள் கேட்டபின்னர் ஒரு தேர் செய்ய எவ்வளவு காலம் எடுக்கும் என்பது ஒரு கேள்வியாக இருக்கும். தேர் இப்ப உள்ள நவீன வசதிகள், தேரின் வேலைப்பாடுகளையும் பொறுத்து காலம் வேறுபடும். சாதாரணமாக ஆறு மாதத்தில் இருந்து ஒரு வருடம் தேவைப்படும், சிறிய தேர் என்றால் மூன்று மாதத்திலையே செய்து முடிக்கலாம் என்கின்றார். இவற்றை விட ஆளணி முக்கியமான பங்கு வகிக்கின்றது. இப்ப தொழில்நுட்ப உதவிகள் இயந்திங்களுன்ர உதவியள் இருக்கிறதால அந்தத் தாக்கம் இல்லை என்கின்றார் அவர்.

பொதுவாக இத்தேர் சதுரம், நீள் சதுரம், அறுகோணம், எண்கோணம், நவகோணம், வட்டம், நீள் வட்டம் போன்ற சில வகைகள் தான் எமக்கு தெரியும், இவைற்றைவிட வேறு வகைகளும் உள்ளது என்கிறார்



"புசாந்திரம் என்று சொல்றது. முகவுத்திரம் வைச்சுச் செய்றது என்றால் முன் மடக்கைகள் முன்னுக்கு இழுத்து வரும். அது ஒவ்வொரு கடவுளுக்கு ஏற்றமாரி அமையும். பிள்ளையாருக்கு என்றால் வட்டம். சிவனுக்கு என்றால் புசாந்திரம். அறுகோணம் என்றால் முருகனுக்கு. எண் கோணம் பொதுவாய் எல்லா சாமிக்கும் செய்யலாம். அறுகோணத்திலையும் இரண்டு மூன்று கோயில்களுக்கு அப்பா தேர் செய்தவர். சிலர் இப்ப புதுமையள் என்றுட்டு சில சில ஐடியாக்கள் பண்றது. எல்லாம் குறைஞ்சு கொண்டு வருகுது. மிசினறி வந்தாலும் என்ன பிரச்சினை என்றால் கைவேலை இருக்குத்தானே. எவ்வளவோ கை வேலை இருக்கு. எங்கடை வேலை எல்லாம் எவ்வளவு மிசினறி வந்தும் செய்யேலாது தானே."

அவரது வேலை நேரத்தை கருத்தில் கொண்டு இன்னும் ஒரு இடத்தை நாடினோம். அங்கே குதிரை வாகனங்கள் உளிகளினால் செதுக்கிக்கொண்டிருந்தார்கள். இது எந்த கோயிலுக்கு என்று கேட்டோம். இது புத்தளத்தில் இருந்து வந்த ஓடர் என்றார். புத்தளத்தில் எந்தக்கோயில் என்றோம். கோவில் இல்லை புத்தளத்தில் இருந்து வரும் வியாபாரி ஒருவர் ஆறு குதிரைகளை கேட்டிருந்தார். அடிக்கடி இப்படி வாங்கிச் செல்வார், இதை கொழும்புக்கு கொண்டே விக்கிறவையாம் என்றார்.

அன்ரிக் கடையொன்றில் வாகனம். படம் : சுஜீ


நண்பர் ஒருவர் சொல்லிருந்தார் இவ்வாறான கடைகள் பல இலங்கையில் இருப்பதாக. வெளிநாட்டவர்களுக்கு பழைய பொருட்களில் ஆர்வம் உண்டு. அதனால் அவற்றை அதிக விலை கொடுத்து வாங்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். எனவே கிழக்கின் சில பகுதிகளில் இருந்து வரும் பழைய பொருள் வியாபாரிகள் சிலர் போரின்போது சேதமடைந்தவை, கோவில் புனர் நிர்மானம் செய்யும் போது கழித்து விடப்பட்டவற்றைப் குறைந்த விலைகளில் பெற்று அவற்றை தங்கள் கொழும்பு கடைகளில் காட்சிப்படுத்தி விற்கிறார்கள். யுத்தத்த காலத்தில் சூறையாடப்பட்டவை, அண்மைக்காலமாக கோவில்களில் காணாமல் போகும் வாகனங்கள் கூட இந்த வகையில் அடங்கும்,

இந்தக் குதிரைகளைப் போல் புதிதாகவும் செய்து அவற்றை சில திராவகம் கொண்டும், சில முறைகளிலும் உருமாற்றம் செய்து, பழையனவாக மாற்றி "அன்ரிக்" பொருட்கள் என்ற போர்வையிலும் விற்பனை செய்கிறார்கள்.



அவை வெளிநாட்டவர்களாலும். சில கோவில் வேலைகளுக்கு என்று மீண்டும் எம்மவர்களாலும் வாங்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு கொண்டும் வரப்படுகின்றது. இப்போது செய்யும் வேலைப்பாடுகள் நிறைந்த அழகிய விடையங்களைக் கொண்டிருப்பதில்லை என்கிறார்கள் தேர்ச்சிமிக்க ஆசாரிகள். கலைகள் பணமாக்கப்படுவதாகவும் அவர்கள் கவலை கொள்கிறார்கள். பழைய பொருட்களின் தரம், அதன் பெறுமதி அறியாத நாங்களும் எல்லாவற்றையும் பழைய பொருள் வியாபாரிகளிடம் கொடுத்துவிட்டு வரலாறுகளை தேடிக்கொண்டிருக்கிறோம். எங்கள் நீண்ட வரலாறுகள் இடையே களவாடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. தொன்மங்களும் தொலைந்துகொண்டிருக்கின்றன..
Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா