
நீர் உண்டு நிலம் உண்டு
வானம் உண்டு வாயு உண்டு
தீ உண்டு நீ உண்ணும்
மயான பூமியாட இது...
இசைகள் இசையற்று
சுருதிகள் சுதியிழந்து
தாளங்கள் தப்பாய் போன
மனிதங்கள் மரித்து
புனிதங்கள் புதைந்து
கடவுள்கள் காணாமல் போன
மயான பூமியாட இது...
நட்பில் துரோகம்...
காதலில் காமம்...
உறவுகளில் வேஷம்...
எல்லாமே சபிக்கப்பட்ட
குணத்துடன் பணம் கலந்து
செய் நன்றிதனை மறந்த
மொழியுடன் மொழி கலந்து
தாய்மொழி கற்பிழந்த
மயான பூமியாட இது...
என்ன செய்வது
அவளும் என் தாய்தான்,
என்ன செய்வது
அவளும் என் சகோதரிதான்,
என்ன செய்வது
அவளும் என் தோழிதான்....
இசைகளை எழுப்பப்பார்க்கிறேன்,
சுருதிகளை மீட்கப்பார்க்கிறேன்,
என்னால் முடியவில்லை...
கடவுளை தேடிப்பார்க்கிறேன்..
புனிதங்களை தோண்டப்பார்க்கிறேன்
என்னால் முடியவில்லை...
எதுவும் என்னால்
செய்ய முடியாத வாழ்க்கை....
எதுவும் என்னால்
நிர்ணயிக்க முடியாத உலகம்...
ஓரமாய் இருந்து
எழுதிவிட்டு போகிறேன்.. நானும்
இந்த மயான பூமியிடம்...
தமிழ்நிலா
தமிழ்நிலா
தேசிய இலக்கிய விழா 2012
மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியது..
(யாவும் கற்பனையே...)
(யாவும் கற்பனையே...)
இரவெல்லாம் முழித்துக் கொண்டிருந்து அழுது விட்டு பின் தூங்கியதில் விடிந்து பகல் ஆனதும் தெரியாமல் உறங்கிக்கொண்டு இருந்தாள் சுபா. அவளது மூத்த மகள் தீபா முற்றத்தில் இருந்து தனது நிழலையே முறைத்து பாத்தபடி இருந்தாள்.

நட்புக்கு மரணம் இல்லை Vol-1
நட்புக்கு மரணம் இல்லை Vol-2
By- தமிழ்நிலா
Photos - Thanks to Google
Music Credit - Naveena Saraswathi Sabatham team
My blogger - www.onemanspoems.blogspot.com
தமிழ்நிலா

என் கனவுகள் வித்தியாசமானவை
விசித்திரமானவையும் கூட
மேகமே இல்லா இடத்தில்
மழை பொழிவது போலவும்,
காற்றே இல்லா இடத்தில்
புயல் வருவதை போலவும்..
இருக்கும் என் கனவுகள்...
கடலில் இருந்து மலைகளுக்கு
அருவிகள் ஓடுவது போலவும்
வானில் இருந்து பூமி நோக்கி
நிலா வருவது போலவும்
இருக்கும் என் சில கனவுகள் ..
பாலைவன வெயில்
வெறுங்காலுடன் சிறுமி...
திடீர் என மழை..
எங்கிருந்தோ முளைவிடும்
பசும் புற்கள்...
அடிக்கடி வந்துபோகிறது ...
எதோ ஒரு போர்
வானில் இருந்து தட்டுக்கள்
இருண்டு விடுகிறது பாரே..
சத்தம் மட்டும்
கேட்டுக்கொண்டே இருக்கும்..
நடு இரவில் பயமுறுத்தும்...
அருங்காட்சியகத்தில்
ஒரு குவளை நீர்...
சோறு அடைத்த பைகள்..
நிர்வாண மிருகம்..
அச்சடிக்கப்பட துண்டுக் காகிதம்..
சுண்டுவிரலில் இணையம்..
சூனியமான ஏதோ ஒன்று..
தொடராத அதிகாலைக்கனவிது....
ஒற்றை இறகு வண்ணாத்து பூச்சி...
கொம்பு முளைத்த மனிதன்..
அங்கும் இங்குமாய் கிழிந்த துணிகள்...
பூக்களில் இரத்தம்..
துப்பாக்கியில் கண்ணீர்..
அடிக்கடி பகிரப்படும் சில உருவங்கள்..
என்ன கனவிது..??
என் கனவுகள் விசித்திரமானவை
விளங்கிக்கொள்ள முடியாததும் கூட...
தமிழ்நிலா
காற்றுவெளி December 2013

சாமி வலம்வந்த இரண்டு சக்கர தேர்.
தாரில் தவழும் நான் பார் பார்த்த
புட்பக விமானம்...
அதே சைக்கிள் அதே அப்பா
அன்றும் இன்றும்..
ஆரம்பத்தில்
அம்மாவின் மடிதான்
வானம் மட்டும் பார்த்தேன்..
நாட்கள் நகர எனக்கென்று
ஒரு இருக்கை...
கைபிடியில் கொளுவி
சிம்மாசனம் போல் இருக்கும்
என் பின்னல் கதிரை..
நாளாக முன் இருக்கை எனதானது...
அப்பாவின் சைக்கிளில் இருந்து
உலகம் பார்த்தேன்.
என் முதல் பயணம்..
எனக்கு ரசிக்க பழக்கியது
பல கதைகளை சொல்லும்
என் ஒவ்வொரு பயணங்களும்..
உல்லாச பிரயாணி நான்
வழிகாடி அப்பா...
எம்மை போல அதனிலும்
ஒரு பார்வை எப்போதும் இருக்கும்..
பூசி மெழுகி தேவதை போல
பார்த்துக்கொள்வார்...அப்பா
எங்கள் பள்ளிக்கு வரும்
உறவினரின் இன்ப துன்பத்தில்
கலந்து கொள்ளும்..
உடமைகளை காவிச்செல்லும்
போர்காலத்திலும் எம்மில் ஒன்றானது...
சைக்கிளுடன் காலமும் ஓடிவிட்டது...
நான் சற்று மாறியிருந்தேன்...
அதே சைக்கிள் அதே அப்பா
ஆனால் வேர்வை படிந்தும்
துருப்பிடிக்கவில்லை மிதிகள்,
மிதித்த கால்கள் சற்று தளர்ந்திருந்தன...
மணி ஓசை அப்படியே,
குரல் ஓசை குறைந்து விட்டது..
பற்றிய கைபிடிகள் ஓடிய சக்கரங்கள்
இன்னும் மின்னிக்கொண்டது..
பார்வை மங்கிக்கொண்டது...
காணமல் போய்க்கொண்டிருக்கும்
அப்பாவின் சைக்கிளும்
காணமல் போய்விட்டது
அன்றொருநாள்.....
தமிழ்நிலா
காற்றுவெளி November 2013

மிருகங்கள் பேசச்செய்தேன்
பறவைகள் சிரிக்கச்செய்தேன்
பச்சைகள் கொண்டு பூமியை மூடி..
செங்கறைகளை கரைத்து
நீரினை பாச்சி மீண்டும்
உலகத்தை செளிக்கச்செய்தேன்..
மொழியில்லா பாசை பேசும்
முகமில்லா மனிதர் வாழும்
மதமில்லா கடவுள் கொண்டு
புதிதாய் ஓர் உலகம் செய்தேன்
உருவம் கொடுத்தேன்
உணர்வை கொடுத்தேன்..
உயிரைக் கொடுத்தேன்...
எல்லாம் கொடுத்தேன்
புதிதாய் ஓர் உலகம் செய்தேன்
ஒன்றை மறந்தேன்
மனிதம் மட்டும் வைக்க மறந்தேன்..
மனிதம் தேடி கடவுளிடம் போனேன்
அங்கும் இல்லை.. எங்கும் இல்லை..
பூமியில் எங்கோ இருப்பதாய் சொன்னார்..
கண்டால் சொல்லுங்கள்
தொலைந்து போனதை...
புதிய உலகம் இருப்பதாய் சொல்லுங்கள்..
மனிதம் சிறிது உங்களுக்கும் தருகிறேன்....

