Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

பூவே இத்தனை அழகு..
உனக்கு எப்படி வந்தது...???

உலகத்தின் முதல்
மழைநாளில்
வானவில் கரைந்திருக்குமோ...

வானத்து ஆழகிகளின்
முத்தங்கள் பட்டிருக்குமோ...

தேவதைகளின் வியர்வை
மண்ணில் சிதறி இருக்குமோ...

என்னவாய் இருக்கும்...??


*  *  *  *  *  *  *  *  *  *  *  *  * 

*  *  *  *  *  *  *  *  *  *  *  *  *  
காலையில் தானே
பேசிவிட்டு போனேன்..?
ஏன் தரையில் கிடக்கிறாய்..

தலை நானியதால்,
உடல் சோர்ந்ததால்
தூக்கிப் போட்டுவிட்டார்களோ..?

அழகு என்ன நிரந்தரமா...
அழுது விடாதே...

வாழ்வு என்ன நிரந்தரமா...
உன் ஆயுள் சில சில நாள்..
எம் ஆயுள் சில பல நாள்...
அவ்வளவு தான்...

உன் குணம் யாருக்கு வரும்..???

நீ மட்டும் தான் சாதிபார்ப்பதில்லை...
எல்லோர் தலையிலும்
அமர்ந்து கொள்கிறாய்..

நீ மட்டும் தான் மதங்களை
பிரிப்பதில்லை - எல்லா கடவுளின்
பாதங்களிலும் பூஜை செய்கிறாய்...

நீ தான் உண்மையான வள்ளல்..
பூச்சிகளின் பசிபோக்க
தவறியதே இல்லை....

நீ தான் அதிக பொறுமைசாலி..
கொடுமைகள் புரியினும்
சுகந்தம் பரப்புகிறாய்..

உன் தியாகம் எதை மிஞ்சிவிடும்..

வண்டுகள் குத்தி போனாலும்..
தாங்கிக் கொள்கிறாய்...

எலும்பை முறித்து - உன்
தலை கிள்ளி தலையில்
சூடிப்போகையிலும் சிரிக்கிறாய்..

நூல்களில் கட்டி தூக்கும்
இடுகிறார்கள் - சகித்துகொள்கிறாய்..

உன்னில் தான்
ஜேசுவை காண்கிறேன்..
மகாத்மாவை காண்கிறேன்..

மொட்டாய் முடங்கி விட
நினைக்கிறாயா..??
விரியக் கூடாதென்று
உறுதியாய் இருக்கிறாயா..???

வேண்டாம், பூவே நீ மலர்...
உன்போல் தான் நானும்..
நாளை மீண்டும் பிறந்து வா...
எனக்கு தோழி வேண்டும்..

தமிழ்நிலா

இன்னமும் இருக்கிறார்கள்...

சில கண்ணகிகள்
சில சீதைகள்
சில தமயந்திகள்
சில சகுந்தலைகள் 

இலக்கிய புத்தகங்களில்...
தமிழ் பாடப்பரப்புகளில்..
கவிஞர்களின் கற்பனையில்..
மட்டுமே...  ஆனால்..  அதிகம்...

மாதவியை நாடும் 
கோவலர்களும்...
வீட்டுவாசம்  அனுப்பும் 
ஸ்ரீ இராமர்களும் ...
மனைவியை விற்றுவிடும் 
நள மகாராஜர்களும் ...
காதலியை மறந்துவிடும் 
துஷ்யந்தன்களும்...


இயங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.. 
இங்கேயும் இருக்கிறார்கள்..
நிஜ வாழ்க்கையில்...

தமிழ்நிலா


வீதிகள் எங்கும்
புதைக்கப்படுகின்றன
வேக வெடிகள்..
சந்திகளில் எல்லாம்
அமைக்கப்படுகின்றன
விபத்து நிலையங்கள்...

கனரக ஆயுத அழிவை
கடந்து வந்தால்,
கன(ரக) வாகன அழிவு...

சாரதியின் இருக்கைக்கு
அருகில் தான்
இயமனின் இருக்கை...
பிரயாண சீட்டு இன்றி
சித்திர குப்தர்களின் வருகை..
கண்ட இடத்திலும்
கணிக்கபடுகிறது...
பாவ புண்ணியங்கள்....!!


அரசுக்கும் தனியாருக்கும்
விபத்தில் கூடவா போட்டி..??
போட்டி போட்டு இடித்து
அழிக்கிறார்கள் மக்கள் கனவுகளை...


நீதி மன்றங்களில் இன்னமும்
தேங்கி இருப்பதெல்லாம்..
விபத்து வழக்குகள் தான்...

தமிழ்நிலா


இருண்ட மனதுக்குள் சிறகடிக்கும்
கறுப்பு மின்மினி
சாதி
*****

இறக்கைகள் கழன்ற பின்னும்
பறக்க துடிக்கும் ஈசல்
காதல்
*****

சிறகுடன் விழுங்கியபின்னும்
பறக்க முடியாத பல்லிகள்
சமூகம்
*****

தமிழ்நிலா


பேனா முனைகளில்
என் வலிகள்...
வலிகளில் தாகம்
இன்னும் ஒரு தடவை
மாறுமா இந்த
உலகத்தின் தலை எழுத்து ..??

இனங்கள்
மதங்கள்...
மொழிகள்,
சாதிகள்,
பேதங்கள்..
நாகரீகம்..

எத்தனை
எத்தனை

என்னால்
மாற்றமுடியவில்லை..
மடமைகளை
வளைக்க முடிந்தது
உடைக்க முடியவில்லை..

ஏனெனில்
நான் பாரதியில்லை..
இருந்தாலும்
எனக்குள் ஒரு பாரதி..

தமிழ்நிலா


காற்றுவெளி June 2012



வான புத்தகத்தில்..
எழுத்துகள் சிதறிக்கிடக்கின்றன..
நட்சத்திரங்கள்...
*****

நடுப்பக்கத்தில் வழமை போல்
சோக கவிதைகள் தான்..
அமாவசை இரவு..
*****

அட்டை பக்கத்தில்
அழகான தேவதையின் முகம் ..
நிலா...
*****

கவிதைகள் எழுதும்
முன்னுரை
அதிகாலைப்பொழுது..
*****

நீண்டு கொண்டு போகும்
ஏழு வரி கவிதை..
வானவில்...
*****

சின்ன சின்ன ஹைகூக்களின்
அணிவகுப்பு..
வெண் மேகங்கள்..
*****

இதோ கவிதைகளின் காதலன்
வருகிறான்..
சூரியன்..
*****

தமிழ்நிலா 13.02.2014

நிலாந்தன் ஈழத்தின் கவிதை மற்றும் பத்தி எழுத்தாளர். கவிஞராகப் பரவலாக அறியப்படும் இவர் இலக்கியம், அரசியல் தொடர்பாகக் கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதுபவர். ஈழம், அதன் பிரச்சனைகளை வித்தியாசமான முறையில் ஆராயுமொரு ஆராட்ச்சியாளரும் கூட...
Next PostNewer Posts Previous PostOlder Posts Home